
மானாமதுரை: மானாமதுரை அருகே லாரி ஓட்டுநர் கொலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி, மகன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் மானா மதுரை மூங்கில் ஊருணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சதுரகிரி (42). இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை காணவில்லையென அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்தனர். அப்போது சதுரகிரியின் மனைவி ராதிகாவிடம் (40) போலீஸார் விசாரித்தபோது வெளியூரில் தங்கி லாரி ஓட்டி வருவதாகவும், ஆனால் தங்களிடம் பேசுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சதுரகிரி மகன் துரைசிங்கத்தை (20) ஒரு வழக்கு தொடர்பாக போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தந்தையை 2 ஆண்டுகளுக்கு முன் தானும், தனது தாயாரும் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் விசாரணையில் இந்த கொலையில் மொத்தம் 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிளங்காட்டூர் கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த சதுரகிரி உடலின் எலும்புகளைத் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/t5leKCO
0 Comments