
ஊராட்சி கவுன்சிலர் கொலைக்கு பழிக்குப் பழியாக நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேர் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வாயிலில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில், நேற்று காலை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து 7 பேர் கொண்ட கும்பல், ஒருவரை விரட்டிக் கொண்டு வந்தது. அவர் நீதிமன்ற வாயில் வழியாக தப்பியோட முயன்றார். நீதிமன்றம் முன்பு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், அங்கிருந்து காரில் தப்பிவிட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் கூடிய வழக்கறிஞர்கள், காவல் துறைக்கு எதிராக கோஷமெழுப்பினர். நீதிமன்றத்திலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vU2MaG1
0 Comments