
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் முனாப் பாஷா மகன் முபினுதீன்(30). இவரது மனைவி ரஜியா(25). இவர்கள் இருவரும், கடந்த 6-ம் தேதி இரவு போளூர் - வேலூர் சாலையில் உள்ள பங்களாமேடு கூட்டுச்சாலையில் சண்டை போட்டுள்ளனர்.
மேலும், மனைவி ரஜியாவை முபினுதீன் தாக்கியுள்ளார். இதனை, அதே பகுதியில் வசிக்கும் நாடக ஆசிரியர் தர்மலிங்கம்(75) என்பவர் கண்டித்துள்ளார். மேலும் அவர், சண்டை போட்டுக் கொள்ளாமல் தம்பதி இருவரும் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து தர்மலிங்கத்தை முபினுதீன் பலமாக தாக்கியுள்ளார். இதில் கண், மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தர்மலிங்கத்தை, போளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக, தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தர்மலிங்கம் உயிரிழந்தார். இது குறித்து தர்மலிங்கம் மகள் குமாரி கொடுத்த புகாரின் பேரில் போளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முபினுதீனை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EMnXbY
0 Comments