
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் அசோகன்(38). இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகள் 18 பேரின் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச புகைப்படங்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் கடந்த 21-ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர் குமாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து அவர், நாகை ஆட்சியர், எஸ்.பி, முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கரியாப்பட்டினம் போலீஸிலும் புகார் அளித்தார்.
இதையடுத்து, கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 18 மாணவிகளிடமும் விசாரித்து வந்தனர். ஆனால், புகாருக்குள்ளான உடற்கல்வி ஆசிரியர் அசோகன் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதையடுத்து, அசோகனை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் நேற்று முன்தினம்பள்ளி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆயக்காரன்புலம் கடைத் தெருவில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் அசோகனை போலீஸார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ICk7uhJ
0 Comments